Monday, January 22, 2018

சத்தியவான் சாவித்திரி கதை

sathiyavan savithiriமகாபாரத இதிகாசத்தில், பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கையில், பதிபக்தியின் மேன்மையை விளக்குமுகமாக திரௌபதிக்குமார்கண்டேய முனிவர்எடுத்துரைத்தார்.
மத்திர நாட்டுமன்னன் அசுவபதிக்கு சூரியபகவானின் அருளால் கிடைத்த மகள் என்பதால் சாவித்திரி அழகிலும்   பண்பிலும் சிறந்து விளங்கிய அவளுக்கு, இந்துக்களின் மிகப் புனிதமான பிரர்த்தனையான  சாவித்திரி என்ற பெயர் வைக்கப்பட்டது.  அவளுக்கு வயது வந்ததும் கணவனைத் தேர்ந்தெடுக்கும்படி அவளது தந்தை சொன்னார்.  பண்டைக்காலத்தில் அரச குமாரிகள் மிகச் சுதந்திரமாக வாழ்ந்தார்கள், தங்கள் கணவனைத் தாங்களே தேர்ந்தெடுத்தார்கள்.

 சாவித்திரி தங்கத் தேரில் அமர்ந்து, தன தந்தை நியமித்திருந்த மெய்க் காப்பாளரும் அரசவைப் பரிவார முதியோரும் புடைசூழத் தொலைதூர நாடுகளுக்குப் பயணம் செய்தாள்.    பல இளவரசர்களைக் கண்டும் யாரும் சாவித்திரியின் உள்ளத்தைக் கவரவில்லை. 

இறுதியாக, இந்தியாவில் அந்த நாளில் மிருகங்களுக்கென்று ஒதுக்கப்பட்டதும், மிருகங்களைக் கொள்ளக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்ததுமான ஒரு காட்டிலிருந்த ஆசிரமத்தை அடைந்தாள்.   அங்குள்ள  மிருகங்கள் மனிதரைக் கண்டு பயப்படுவதில்லை, ஏரியில் உள்ள மீன்கள் மனிதர்களின் கையிலிருந்து உணவுப் பொருளை வந்து உண்டது.   ஆயிரக்கணக்கான வருடங்களாக அங்கிருந்த எதையும் யாரும் கொன்றதில்லை.  முனிவர்களும் வயோதிகர்களும் அங்கே சென்று மான்கள், பறவைகள் ஆகியவற்றுடன் வசித்தார்கள்.  வாழ்கையில் அலுப்புத் தட்டும்போது மனிதன் காட்டிற்குச் சென்று முனிவர்களுடன் வசிப்பான்; எஞ்சிய காலத்தை முனிவர்களோடு ஆன்மீகத்தை பற்றிப் பேசுவதிலும் தியானத்திலும் களிப்பான். 

துயுமத்சேனன் என்னும் ஓர் அரசர் இருந்தார்.  அவர் தம் வயதான காலத்தில் கண்பார்வையை இழந்திருந்த போது எதிரிகள் அவரைத் தோற்கடித்து, அவருடைய அரசைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.  பாவம், அந்த முதிய குருட்டு மன்னர் மனைவியுடனும் மகனுடனும் அந்தக் காட்டிற்கு வந்து தவம் செய்வதில் காலத்தைக் கழித்தார்.  அவருடைய மகன் பெயர் சத்தியவான்.

பல அரசவைகளையும் பார்த்த பிறகு, சாவித்திரி இறுதியாக இந்த ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள்.  ஆசிரமத்தில் இருந்த முனிவரைக் கண்டு வணக்கம் செலுத்தாமல், எவ்வளவு பெரிய மன்னரும் ஆசிரமத்தைக் கடந்து செல்லக் கூடாது.  அவ்வளவு மரியாதையை இந்த முனிவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.  இந்தியாவின் பெரிய சக்கரவர்த்திகூட, கந்தைகளை உடுத்திக் கொண்டு காய்கனிகளைத் தின்று வாழ்ந்த ஒரு முனிவரின் வம்சத்தில் தோன்றியவன் என்று தன்னைச் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைவான்.  நாங்கள் முனிவர் பரம்பரையில் வந்தவர்கள்.  ஆகவே ஆசிரமங்களின் பக்கமாகச் செல்லும் அரசர்கள் கூட ஆசிரமத்திற்குள் நுழைந்து முனிவரை வணங்குவதை ஒரு பெருமையாகக் கருதினார்கள்.  அவர்கள் குதிரைமீது வந்துகொண்டிருந்தால் கீழே இறங்கி நடப்பார்கள்;    தேர்களில் வந்தால், அவற்றை நிறுத்தி விட்டு, கவசங்களை அகற்றிவிட்டுத் தான் உள்ளே செல்ல வேண்டும்.  எந்தப் படை வீரனும் ஒரு பக்தனைப் போல் அமைதியுடனும் அடக்கத்துடனும் தான் உள்ளே நுழைய வேண்டும்.

இந்த ஆசிரமத்திற்கு வந்த சாவித்திரி சத்தியவானைக் கண்டதும் இதயத்தை அவனிடம் பறிகொடுத்தாள்.  அரண்மனைகளில் கண்ட அரசகுமாரர்களை விட ஆசிரமத்தில் இருந்த துயுமத்சேணனின் மகனான் சத்தியவான் அவளது இதயத்தைக் கவர்ந்தான்.

சாவித்திரி திரும்பி வந்ததும் தந்தை அவளைப் பார்த்து, 'அருமை மகளே சாவித்திரி, நீ மனம் செய்து கொள்ள விரும்பும் யாரையாவது கண்டாயா சொல்' என்று கேட்டார்.  சாவித்திரியும் நாணத்துடன், 'ஆம், அப்பா' என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

'அவர் அரசகுமாரன் அல்ல, அரசை இழந்துவிட்ட துயுமத்செணனின் மகன்.  அவருக்குத் தந்தை வழிச் சொத்து எதுவும் இல்லை.  ஒரு குடிசையில் துறவி போன்று வாழ்க்கை நடத்துகிறார்.  கிழங்குகளையும், இலைகளையும் சேகரித்து, வயதான பெற்றோர்களைக் காப்பாற்றுகிறார்' என்று சொன்னாள்.இதைக் கேட்ட அரசன் அந்த வேளையில் அங்கிருந்த நாரதரிடம் இதுபற்றிக் கலந்து பேசினார்.  அனால் நாரதர் இதனை ஒரு பெரிய அபசகுனம் என்று கூறிவிட்டார்.  அதை விளக்க வேண்டும் என்று மன்னன் கேட்டதற்கு நாரதர், 'இன்றிலிருந்து பன்னிரண்டு மாதங்களில் சத்தியவான் இறக்கப் போகிறான்' என்று கூறினார்.  இதைக் கேட்டு அரசன் நடுங்கினான்.  சாவித்திரி, அந்த இளைஞன் இன்னும் பன்னிரண்டு மாதங்களில் இறக்கப் போகிறான்.  நீ விதவையாகி விடுவாய்.  அதை நினைத்துப் பார்.  இந்த இளைஞன் வேண்டாம். அற்ப ஆயுள் உள்ள இந்த இளைஞனை நீ மணக்க நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்' என்றான்.  'அதைப்பற்றிக் கவலைபடாதீர்கள் அப்பா!  வேறு யாரையாவது மணம் புரிந்துகொள்ளச் சொல்லி என் கற்புக்கு மாசு தேடாதீர்கள்.  ஏனெனில் நான் அந்த வீர சத்தியவானைத் தான் காதலிக்கிறேன்.  அவரை என் மனத்தில் கணவனாக வரித்துவிட்டேன்.  பெண் ஒரு முறை தன கணவனைத் தேர்ந்தெடுப்பாள், பிறகு அதிலிருந்து மாறவே மாட்டாள்' என்று சொன்னாள்.
    
 சாவித்திரியின் மன உறுதியைக் கண்டு அரசன் திருமணத்திற்குச் சம்மதித்தான்.  சாவித்திரிக்கும் சத்தியவானுக்கும் திருமணம் நடந்தது.  அவள் தன அரண்மனையைவிட்டுக் காட்டிற்குச் சென்று, கணவனுடன் வாழ்ந்தாள்;  அவனுடைய பெற்றோர்களுக்குத் தொண்டு செய்தாள்.

சத்தியவான் என்றைக்கு இறப்பான் என்று சாவித்திரிக்குத் தெரிந்த போதிலும், அதை அவள் அவனிடம் சொல்லவில்லை.  தினமும் அவன் காட்டிற்குச் சென்று, பழங்களும் மலர்களும் விற்கும் சேகரித்துக்கொண்டு திரும்புவான்.  சாவித்திரி சமையல் செய்வாள்.  அந்த முதியவர்களுக்குத் தொண்டு செய்வாள்.

வாழ்க்கை இப்படியே சென்றது.  இறுதி நாளுக்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன.  அந்த மூன்று நாட்களும் உணவும் உறக்கமும் இன்றி விரதம் மேற்கொண்டாள் சாவித்திரி.   இறுதிநாள் இரவு.  இரவெல்லாம் உறங்காமல், கண்ணீர் வெளியே தெரியாமல் மனத்திற்குள் அழுதுகொண்டே பிரார்த்தனைகள் செய்தாள்.  அந்த இறுதி நாள் பொழுது விடிந்தது.  அன்று ஒரு கணம்கூடக் கணவனைவிட்டுப் பிரியக் கூடாது என்று தீர்மானித்தால் அவள்.  விறகு வெட்டச் செல்லும் கணவனுடன் செல்லத் தன்னையும் அனுமதிக்கும்படி அவனுடைய பெற்றோர்களிடம் அனுமதிபெற்று உடன் சென்றாள்.

காட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சத்தியவான் தனக்கு மயக்கமாக இருப்பதாகக் கூறினான்.  'என் கண்ணே சாவித்திரி, தலைசுற்றுகிறது, என் புலன்கள் தடுமாறுகின்றன.  எனக்குத் துக்கம் வருகிறது.  நான் உன் பக்கத்தில் சற்று இளைப்பாறுகிறேன்' என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.  சாவித்திரி பயந்து நடுங்கிக் கொண்டே, 'என் ஆருயிரே, தலையை என் மடியின்மீது வைத்துக்கொண்டு படுங்கள்' என்று சொன்னாள்.  மனைவியின் மடியில் தலைவைத்துப் படுத்த சத்தியவான் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு உயிர் துறந்தான்.  அந்தத் தனிக்காட்டில் கண்களில் நீர் மல்க, தன கணவனைக் கட்டிபிடித்தபடியே இருந்தாள் அவள்.

அப்போது அவனது உயிரை அழைத்துச் செல்ல எமதூதர்கள் அங்கு வந்தார்கள்.  ஆனால் சாவித்திரி அமர்ந்திருந்த இடத்தை அவர்களால் நெருங்கமுடியவில்லை.  அவளை அக்கினி வட்டம் ஓன்று சூழ்ந்திருந்தது.  எனவே எமதூதர்கள் எமனிடம் திரும்பிச் சென்று சத்தியவானின் உயிரைக் கவர முடியவில்லை என்று சொன்னார்கள்.
இறந்தவர்களுக்கு நீதி வழங்குபவனும், மரணக் கடவுளுமான எமனே அங்கு வந்தான்.  பூமியில் இறந்த முதல் மனிதன் அவன்.  அவன்தான் மரணக் கடவுளாவான்.  இறந்த பிறகு ஒருவனைத் தண்டிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பவன்தான் எமன்.  அவனே அங்கு வந்தான்.  அவன் தேவன்,  ஆதலால் அந்த அக்கினி வட்டத்தைத் தாண்டி உள்ளே நுழைய முடிந்தது.

அவன் சாவித்திரியைப் பார்த்து, மகளே, இந்த உடலை விட்டுவிடு.  மரணம் மனிதனின் விதி.  முதன்முதலில் மரணமடைந்த மனிதன் நான்.  அன்றிலிருந்து எல்லோரும் சாகத்தான் வேண்டும்.  மரணமே மனிதனின் விதி என்றான்.  இதைக் கேட்டு சாவித்திரி விலகிச் சென்றாள். எமன் உடலிலிருந்து உயிரைப் பிரித்தான்.  பின்னர் உயிரை அழைத்துக்கொண்டு அவன் தன வழியே செல்ல ஆரம்பித்தான்.  சிறிது நேரத்திற்கெல்லாம் சருகுகளின் மீது யாரோ நடந்து வருகின்ற காலடிச் சதம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.  சாவித்திரி எமனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்.

'என் மகளே, சாவித்திரி! ஏன் என்னைப்  பின்தொடர்கிறாய்?  எல்லா மனிதர்களின் கதியும் இதுதான்' என்றான் எமன்.

 சாவித்திரி சொன்னாள்:  'தந்தையே, நான் தங்களைப் பின்தொடரவில்லை.  ஒரு பெண்ணின் விதி இதுதானே!  அன்பர் செல்லும் இடத்திற்கு அவள் சென்றுதானே ஆக வேண்டும்.  ஒரு அன்புக் கணவனையும். அவனுடைய அன்பு மனைவியையும் உங்கள் மாறாத விதி பிரிக்கவில்லையே' என்றாள்.

'உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எதாவது ஒரு வரம் கேள்'.

தாங்கள் வரம் தருவதானால் என் மாமனார் பார்வை பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அருள்புரியுங்கள், மரணதேவா!

'கடமை தவறா மகளே, உன் விருப்பப்படியே ஆகுக' என்று கூறிவிட்டு மரண தேவன் சத்தியவானின் உயிரை அழைத்துக் கொண்டு தொடர்ந்து சென்றான்.  திரும்பவும் காலடிச் சத்தம் கேட்டது, திரும்பிப் பார்த்தான். சாவித்திரி தொடர்ந்து கொண்டிருந்தாள்.

'என் மகளே சாவித்திரி, இன்னும் ஏன் என்னைப பின்தொடர்கிறாய்?

தந்தையே, நான் என்ன செய்வேன்.  நான் திரும்பிப் போக வேண்டும் என்றுதான் பார்க்கிறேன்.  ஆனால் என் மனமோ என் கணவன் பின்னால் செல்கிறது, உடம்பு மனதைத் தொடர்கிறது.  என் உயிர் முன்னாலேயே போய்விட்டது.  ஏனெனில் நீங்கள் அழைத்துச் செல்கின்ற உயிரில்தான் என் உயிர் இருக்கிறது.  உயிர் சென்றால்  உடம்பும்கூடச் செல்லத்தானே வேண்டும்?

'சாவித்திரி, உன் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தேன்.  இன்னும் ஒரு வரம் கேள், அனால் அது உன் கணவனின் உயிராக இருக்கக் கூடாது'.

'தந்தையே, தாங்கள் எனக்கு இன்னொரு வரம் தருவதானால் இழந்த அரசையும் செல்வத்தையும் என் மாமனார் பெற அருள்புரியுங்கள்'.

'அன்பு மகளே, நீ கேட்ட வரத்தைக் கொடுத்தேன்.  வீடு திரும்பு.  ஏனெனில் மனிதர்கள் எமனுடன் செல்ல முடியாது'.

எமன் தொடர்ந்து செல்லலானான்.  சாவித்திரி, மறைந்த கணவனைப் பின்தொடர்ந்தாள்.

எமன் திரும்பிப் பார்த்து, 'நற்குணம் வாய்ந்த சாவித்திரி, நம்பிக்கை இழந்து துயரத்தில் வாடியவாறு என்னைத் தொடராதே'.

என் ஆருயிர்க் கணவனைத் தாங்கள் எங்கு எடுத்துச் செல்கிறீர்களோ, அங்கு செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை'.

உன் கணவன் ஒரு பாவி என்று வைத்துக்கொள்.  அவன் நரகத்திற்குச் செல்ல நேர்ந்தால் சாவித்திரி அங்கும் செல்வாளோ?

வாழ்விலோ சாவிலோ, நரகமோ அவரைப் பின்தொடர்வதுதான் எனக்கு மகிழ்ச்சி'.

'ஏன் குழந்தாய், உன் வார்த்தைகள் மேலானவை.  நான் மகிழ்கிறேன்.  இன்னொரு வரம் கேள்.  ஆனால் செத்தவர்கள் உயிர்பிழைக்க மாட்டார்கள், ஞாபகம் வைத்துக் கொள்'.

'அப்படியானால் என் மாமனாரின் சந்ததி அழியாமல் இருக்கட்டும்.  அவருடைய அரசு சத்தியவானின் மைந்தர்களுக்குச் செல்லட்டும்'.

இதைக் கேட்டு எமதர்மன் புன்னகைத்தான்.  'என் மகளே, உன் கணவனின் உயிர், அவன் உயிர் பெறுவான், உன் குழந்தைகள் அரசாள்வர்.  வீடு திரும்பு.  அன்பு மரணத்தை வென்றுவிட்டது.  உன்னைப்போல் எந்தப் பெண்ணும் கணவனைக் காதலிக்கவில்லை.  உண்மையான அன்பிற்கு முன்னால் மரணதேவனான நான்கூட  ஆற்றல் அற்றவன் என்பதற்கு நீ சான்று' என்றான்.

ஸ்ரீ பாத வல்லபர் பிறந்த கதை

வேத காலத்தில் பாரதத் திருநாட்டில் தவ முனிவர்கள் ஆசிரமங்கள் அமைத்து இறையுணர்வில் தோய்ந்து உலக மக்களுக்கு வழிகாட்டிகளாய், தேவர்களின் உலகங்களுக்கும் பூமிக்கும் தொடர்பு கொண்ட நிலையில் உள்ளுணர்வால் உயர்வடைந்து வாழ்ந்த காலம் அது. அத்தகைய ஒரு கால கட்டத்தில்தான் தெய்வங்களின் ஒருமித்த அம்சமாக ஸ்ரீ தத்தாத்ரேயர் அவதரித்தார். அவதூத ஆசிரம முறையில் ஆரம்ப குருமகான் அவரே.
அவதாரங்கள் தொடர்ந்தன. மக்கள் பரிணாம வளர்ச்சியில் உயர வேண்டும் என்பதற்காக மகான்கள் தொடர்ந்து அவதரித்து, வாழும் முறையைத் தர்ம நெறி சார்ந்ததாக இருக்கும்படி நெறிப்படுத்திக்கொண்டே இருந்தனர். அவ்வகையில் சமுதாய நெறிமுறைகள் கட்டுக் குலைந்து கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் , ஸ்ரீ தத்தாத்ரேயர், ஸ்ரீ பாத வல்லபர் என்ற மனிதராகப் பூமியில் மீண்டும் அவதரித்தார்.
மத்திய இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பீடாபூர் என்ற தேசத்தில் ஆபஸ்தம்ப சாகையில் பிறந்த ஆப்னராஜா என்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவரது மனைவி சுமதா. அவள் இல்லறத்தை நல்லறமாய் நடத்திக்கொண்டு, பதி சேவை செய்து, வந்த விருந்தினரை ஆதரித்துகொண்டு வாழ்ந்து வந்தாள்.
ஓர் அமாவாசை தினத்தன்று அவர்கள் வீட்டில் சிரார்த்தம் (இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது) நடைபெற்றது. பிராமண முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் வரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. திவசச் சமையல் தயாராக இருந்தது. பிராமணர்கள் உணவருந்த வேண்டியது தான் பாக்கி. அந்த சமயத்தில் ஒரு துறவி அவ்வீட்டு வாசலில் வந்து, பவதி பிட்சாந்தேஹி! என்று சொல்லிக்கொண்டு நின்றார்.
ஆசார முறைப்படி இறந்த முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் நாளன்று வெளி ஆட்கள் யாருக்கும் உணவளிக்கக்கூடாது. பிட்சை அளிக்கக்கூடாது. மேலும் வந்திருக்கும் பிராமணர்கள் உணவருந்தி, காக்கைகளுக்கு அன்னமிட்ட பிறகு தான், வீட்டில் உள்ளவர்களே சாப்பிட முடியும். மிகுந்த சிரத்தையுடன், கூடுதல் கவனத்துடன் பிராமணர்கள் பொறுப்பாகச் செய்ய வேண்டிய சடங்கு இது.
இவ்வளவும் சுமதா நன்றாக அறிந்தவள் தான். என்றாலும் வாயிலில் நின்ற துறவிக்கு உணவளிக்காமல் அவரைப் பசியுடன் திருப்பியனுப்ப அவள் விரும்பவில்லை. எனவே, வகுக்கப்பட்ட நியமங்களை மீறி அவள் பிராமணர்கள் சாப்பிடும்;; முன் பிட்சுவாக வந்தவருக்கு அன்னமிட்டாள்.
கணவனுக்கு அடங்கிய நிலையில் குலதர்மத்தை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தும் துணிவுடன் பசியறிந்து உணவு அளித்த சுமதாவின் முன் பிச்சை பெறுபவராக, மும்மூர்த்திகளின் ஒருமித்த மகானாகிய ஸ்ரீ தத்தாத்ரேயர் நின்றார். அவளது தாய்மைப் பண்பைப் பாராட்டி. தாயே! உன் சேவையைக் கண்டு நான் மகிழ்ந்தேன். வேண்டும் வரத்தைக்கேள்! என்று கூறினார்.
அவள் அவரை வணங்கிப் பலவிதமாகத் துதித்தாள். பிறகு ஸ்வாமி! தாங்கள் என்னைத் தாயே! என்று அழைத்தீர்கள். அந்த வாக்கு பொய்க்கக்கூடாது. உம்மைப் போன்ற ஞானியை நான் மகனாகப் பெற வேண்டும். ஏனென்றால் எனக்குப் பிறக்கும் குழந்தைகள், பிறந்த சில காலத்திற்குள்ளாகவே இறந்து விடுகின்றன. பிழைத்து உயிர் வாழ்கின்ற குழந்தைகள் குருடாகவும், முடமாகவும் இருக்கின்றன! என்று கூறிக் கண்ணீர் விட்டாள்.
அவள் வேண்டுகோளை வந்திருந்த தத்தர் ஏற்பதாகக் கூறி அதில் ஒரு மாற்றத்தையும் கூறினார். அம்மா! உன் விருப்பப்படி எம்மைப் போன்ற ஒரு ஞானி மகனாகப் பிறப்பான். ஆனால் அவன் அநேக நாள் உன் வீட்டில் தங்க மாட்டான். பெரிய ஞானியாகி உன் துன்பங்களைப் போக்கி, உலகில் ஞான மார்க்கத்தைப் பரப்புவான்! என்று சொல்லி மறைந்தார்.
பக்தையான சுமதா நடந்தவற்றை அப்படியே தன் கணவரிடம் கூறினாள். இருவரும் மனம் மகிழ்ந்து, நெகிழ்ந்து இறைவனை வழிபட்டுப் போற்றித் துதித்தனர். பிறகு பக்தியுடன் ஸ்ரீ தத்தரின் அவதாரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
சுமதா தன்னுடைய கணவனின் அனுமதி இல்லாமல் சிரார்த்த (திதி) தினத்தில் பிட்சை அளித்துவிட்ட போதிலும், தோஷம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக எந்த சிரார்த்தம் செய்தாலும் முடிவில் ஏகோ விஷ்ணு! என்று சொல்லி அந்த விஷ்ணுவிற்கு அர்ப்பணம் செய்கின்றோமோ எந்த விஷ்ணுவிற்கே அவள் அன்னமிட்டதால், பித்ருக்கள் சுவர்க்கத்தை அடைந்து பிறவிப் பிணி தீர்த்தனர்.
எனவே, மதிய வேளையில் யார் பிச்சைக்கு வந்தாலும், ஒன்றும் இல்லை போ! என்று சொல்லாமல் நம் சக்திக்கு ஏற்றவாறு பிட்சை இட வேண்டும். அந்த நேரத்தில் வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு உணவிட்டு உபசரிக்க வேண்டும். தத்தர் எந்த ருபமாக வருவார் என்று சொல்ல முடியாது.
நாட்கள் மாதங்களாயின. இறைவன் அருளை வரமாய்ப் பெற்ற சுமதா ஒரு நல்ல நாளில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். தமது குறை தீர்க்க வந்த குலக்கொழுந்தை இருவரும் தெய்வம் தந்த பிரசாதம் என உறுதியாக எண்ணி, ஸ்ரீ பாதன் என்ற பெயரைச் சூட்டினர். குழந்தை வளர்ந்து ஏழு வருடங்களாயின. அவனுக்கு முறைப்படி உபநயனம் செய்து வைத்தனர். உபநயனம் என்பது சிறுவனை வேதம் கற்கத் தகுதியுடையவனாக, பிரம்மச்சாரியாக ஆக்குகின்ற ஒரு சடங்கு. ஸ்ரீ பாதனுக்கு உபநயனம் செய்து முடித்த உடனேயே நான்கு வேதங்களையும், சாஸ்திரங்கள், மீமாம்சம் முதலிவற்றையும் மிகத் தெளிவாகத் தானாகவே சொல்ல ஆரம்பித்தார். கூடியிருந்த பிராமணர்களும் மற்றவர்களும் அதிசயப்பட்டு, யாரோ சித்த புருஷர் ஏதோ காரணத்திற்காக இவர்களுக்குப் புதல்வனாகப் பி;றந்திருக்கின்றார்! என்று பேசிக்கொண்டனர்.
ஸ்ரீபாதனுக்குப் பதினாறு வயது வந்தது. தாய் தந்தையர் அவனுக்குக் கல்யாணம் செய்ய யோசித்தனர். இதை அறிந்த ஸ்ரீ பாதன் தான் பிரம்மச்சாரி என்றும், யோகி என்றும், மற்றப் பெண்களைத் தாயாகவே தான் பாவிப்பதாகவும், இது சத்தியம் என்று கூறி, என்னை ஸ்ரீ வல்லபர் (லட்சுமியின் கணவன்) என்று கருத வேண்டும் என்றான். இதற்குப் பிறகு அவரை ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் என்றே எல்லோரும் அழைத்தனர். அன்று வந்த துறவி சொன்னது உண்மையாயிற்றே! என்று தந்தை நினைத்தார். தாயோ புத்திர பாசத்தால் மிகவும் வருத்தமடைந்து, ‘உன்னைத் தவிர எங்களை யார் காப்பாற்றுவார்கள்? உன்னை நம்பியவர்களை இப்படிக் கை விடலாமா? காப்பாற்ற வேண்டாமா?” என்று சொல்லிக்கொண்டு மயக்கமடைந்து விட்டாள்.
ஸ்ரீபாதர் தாயைத் தேற்றினார். ‘பயப்பட வேண்டாம்! உங்களை நான் அப்படி நிர்க்கதியாய் விட்டுவிட மாட்டேன்” என்று சொல்லி அருகில் நின்றிருந்த தன் சகோதரர்களான குருடனையும், முடவனையும் தமது அமிர்தப் பார்வையால் பார்க்க, அடுத்த நொடி இருவருமே மிக அழகான உடலமைப்பு கொண்டவர்களாகவும், வேத சாஸ்திர பண்டிதர்களாகவும் ஆகிவிட்டனர். எல்லோரும் வியப்போடு பார்த்திருக்க சகோதரர் இருவரும் அவரை நமஸ்கரித்தனர்.
தங்களின் கருணையால் எங்கள் பாபங்கள் தெளிந்தன! என்றனர். ஸ்ரீபாதர் அவர்களை ஆசீர்வதித்து,’ இனி உங்களுக்கு ஒரு குறையுமில்லை. நல்ல விதமாகத் திருமணம் செய்துகொண்டு, சகல செல்வங்களையும் பெற்று நல்ல புத்திரர்களையும், பேரக் குழந்தைகளையும் அடைந்து சுகமாக வாழ்வீர்கள்! தாய் தந்தையருக்கு உரிய பணிவிடைகளை இறுதிவரை பொறுப்போடும் அன்போடும் செய்து வாருங்கள்!” என்றார்.
பிறகு ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் தம் பெற்றோருக்கு உரிய ஆறுதல் மொழிகள் கூறி ஊர் மக்கள் அனைவரிடமும் விடைபெற்று வடக்கு திசை நோக்கிப் புறப்பட்டு போனார். ஓர் உயர்ந்த ஸாதுக்கள் பரம்பரையை உருவாக்கவும், சாதுகளுக்கு தீட்சை கொடுக்கவும், அவர்களுக்கு அனுக்கிரகம் செய்யவும் அதிவேக யாத்திரை மேற்கொண்டார். காசி சேத்திரத்திற்குச் சென்றார். பிறகு பத்ரி நாராயணனைத் தரிசித்தார். பிறகு கோகர்ணம் என்னும் புண்ணியத் தலத்திற்கு வந்தார்.
இவ்வாறு கங்காதரரின் குமாரரான நாமதாரகனுக்கு ஸித்தர், ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் பிறந்த கதையைக் கூற, நாமதாரகன் பக்தியுடனும், பணிவுடனுடம் அவர் கூறியதைக் கேட்டான்.

நளாயினி கதை

சூரியனும் பணிந்த பதுமை
தொண்டை நாட்டில் நிடத நாடு என்ற நாடு உள்ளது. இதன் தலை நகரம் ஆதிந்தபுரம் ஆகும். அந்நாட்டை ஆண்ட ஸ்ரீநளச்சக்கரவர்த்திக்கும், சேது நாட்டு இளவரசி தமயந்திக்கும் பிறந்தவள் ஸ்ரீநளாயினி தேவி. நளாயினியின் பூர்வீக பெயர் இந்திர சேனை என்பதாகும்.

பதிவிரதையான நளாயினி ஒரு முறை தன்னுடைய கணவரான மௌத்கல்ய முனிவரை ஒரு கூடையில் வைத்து சுமந்து கொண்டு அடர்ந்த காட்டு வழியே சென்று கொண்டிருந்தாள். முனிவருடைய கால்கள் கூடைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. அப்போது காட்டில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த ஒரு ரிஷியின் தலைமேல் மௌத்கல்ய முனிவரின் கால்கள் இடித்து விட்டன. அதனால் கோபமடைந்த அந்த ரிஷி மறுநாள் சூரிய உதயமாகும்போது தன்ளை இடித்த மௌத்கல முனிவரின் தலை சுக்கு நூறாக சிதறி இறந்து விடட்டும் என்று சாபமிட்டார்.

ரிஷியின் சாபத்தைக் கேட்ட நளாயினி அம்முனிவரை வணங்கி தன்னுடைய அஜாக்கிரதையால்தான் இத்தகைய தவறு நேர்ந்து விட்டது என்றும் அதனால் தன்னுடைய கணவரை எக்காரணம் கொண்டும் சபித்து விட வேண்டாம் என்று மனறாடி கேட்டுக் கொண்டாள். நளாயினி எவ்வளவுதான் மன்றாடினாலும் அந்த முனிவர் அவள் வார்த்தைகளை சிறிதும் ஏற்கவில்லை. வேறு வழியில்லாத காரணத்தால் தன் கணவரைக் காப்பாற்றும் ஒரே வழி சூரியனை மறுநாள் காலையில் உதயம் ஆகாமல் நிறுத்தி விடுவதுதான் என்று முடிவுக்கு வந்து, கணவனைத் தவிர வேறு யாரையும் மனதினாலும் தீண்டாத பதிவிரதை நான் என்பது உண்மையானால் நாளை சூரியன் உதிக்காமல் போகட்டும், என்று வானத்தை நோக்கி முழங்கி விட்டு, தன் கணவனைச் சுமந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பி விட்டாள் நளாயினி. வீடு சென்றவுடன் தன் கணவனின் இடிபட்ட காலுக்கு மருந்து தடவி, உணவு கொடுத்து அனைத்து பணிவிடைகளையும் செவ்வனே முடித்து விட்டு உறங்கச் சென்று விட்டாள். 

ஆனால், நளாயினியின் எதிர் சாபத்தைக் கேட்ட முனிவர் திடுக்கிட்டார். தன்னையே எதிர்த்து சூரியனைச் சபிக்கும் இந்தப் பெண் யார் என்று தன்னுடைய ஞான திருஷ்டியில் பார்த்தார். அவள்தான் நளாயினி என்பதையும், அவள் ஒரு உத்தம பத்தினி என்பதையும் உணர்ந்து கொண்டார். என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போனார் மகரிஷி. பிரம்மாவை நிந்தனை செய்தால் பெருமாளிடம் விமோசனம் பெறலாம். பெருமாளை நிந்தித்தால் சிவனிடம் பிராய சித்தம் பெறலாம். சிவனையே நிந்தித்து விட்டால் கூட அதை கருணைக் கடலான சற்குரு அதை மன்னித்து விடுவார். ஆனால், உத்தம பதிவிரதா தேவியின் சாபத்திற்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. 

நிச்சயமாக தன்னுடைய சாபம் பலிக்காது என்பதை உணர்ந்த முனிவர் அதற்கு எப்படிப் பரிகாரம் பெறுவது என்று யோசிக்கத் தொடங்கினார். ஏனென்றால் ஒருவருடைய சாபம் பலிக்காத நிலை ஏற்படுமானால் அந்தச் சாபத்தைக் கொடுத்தவர்தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்பது இறை நியதி.

ராமரிடம் தன்னுடைய வில்லைக் கொடுத்த பரசுராமர் அதை நாணேற்ற முடியுமா என்று சவால் விடுத்தார் அல்லவா? அவருடைய சவாலை ஏற்று பரசுராமரின் தனுசில் நாணேற்றிய ராமர் அதற்கேற்ற இலக்கைக் கேட்டபோது பரசுராமர் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டு தன்னுடைய தபோ பலம் அனைத்தையும் ராமருடைய பாணத்திற்கு இலக்காக வைத்தார் அல்லவா? அதே விதத்தில் இப்போது முனிவரின் சாபம் பலனளிக்காத நிலை ஏற்பட்டபோது அது அந்த முனிவரைத்தான் தாக்கும். அவர் தலை வெடித்துச் சிதறும் சம்பவத்தை அவரே சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. இந்த இக்கட்டான ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பிரம்ம லோகம் விரைந்தார் ரிஷி.

பூமியில் நடந்த விஷயங்களை எல்லாம் இந்திரன் மூலம் அறிந்த பிரம்மா எப்படியாவது அந்த ரிஷியிடமிருந்து தப்பித்துக் கொண்டால் போதும் என்று எண்ணி சரஸ்வதியிடம், தாயே, ஒரு ரிஷி பத்தினி சாபத்திற்கு பிராய சித்தம் கேட்டு என்னிடம் வர நினைக்கிறான். பத்தினி சாபத்திற்கு மும்மூர்த்திகளாலும் பிராய சித்தம் தர இயலாதே. எனவே, ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அவனை அனுப்பி விடு, என்று சொல்லி விட்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார். சரஸ்வதி தேவியும் அவ்வாறே அந்த ரிஷி வந்தவுடன் அவருக்கு பாத பூஜைகள் செய்து கௌரவித்து, பிரம்ம மூர்த்தி ஒரு புதிய லோகத்தை சிருஷ்டி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தியானத்தில் இருப்பதால் மூன்று நாட்களுக்கு யாரையும் காண இயலாது என்று கூறி விட்டாள். இல்லாவிட்டால் பத்தினி சாபத்துடன் அம்முனிவரின் சாபத்திற்கும் ஆளாக வேண்டி வருமே.

ரிஷி வேறு வழியில்லாமல் விஷ்ணுவின் வைகுண்டம் சென்றார். இதற்குள் ஒரு ஜாமம் கழிந்து விட்டது. மகரிஷியின் வரவை அறிந்த பெருமாள் பத்தினி சாபத்திலிருந்து அந்த ரிஷியைக் காப்பாற்ற முடியாது என்பதால் நாம் இப்போதைக்கு இந்த ரிஷியின் சாபத்திலிருந்து மீள வேண்டுமானால் நீலகண்டனைச் சரணடைவோம் என்று முடிவு கட்டி கருட வாகனத்தில் ஏறி விரைந்து திருக்கயிலையில் சரண் புகுந்தார்.

விஷ்ணு பகவான் கைலாயம் சென்ற செய்தியை அறிந்த ரிஷி, சரி, இதுவும் நன்மைக்கே. நாமும் கைலாயம் சென்றால் சிவன், விஷ்ணு இருவரில் ஒருவரையாவது பார்த்து சாப விமோசனம் பெற்று விடலாம் என்று நம்பிக்கையை நெஞ்சில் வளர்த்துக் கொண்டு கைலாயம் சென்றார்.

கைலாயத்தில் அந்த ரிஷிக்கு அமோக வரவேற்பு. அதிகார நந்தி அந்த ரிஷியை எதிர் கொண்டழைத்து அவரை உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமர்த்தி அற்புதமாக பாத பூஜைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அதிதி பூஜை நியதியாக பூஜை நிறைவேறும் வரை அதிதியாக வந்தவர் எந்த வேண்டுகோளையும் முன் வைக்க முடியாது அல்லவா? எனவே, நந்தீஸ்வரரின் பூஜை நிறைவேறியவுடன்தான் தான் வந்த காரியத்தைக் கூறி தான் சிவபெருமானைத் தரிசனம் செய்யும் நோக்கத்தைக் கூற முடியும்.

ஆனால், ரிஷியின் வரவை முன்னரே அறிந்த சிவபெருமான் எப்படியாவது அவரை மூன்றாம் ஜாமம் வரை கைலாய வாசலிலேயே நிறுத்தி வைக்கும்படிக் கட்டளை இட்டிருந்தார்.

ஸ்ரீ மத்யார்ஜுனேஸ்வரர் சிவாலயம்
பெட்டவாய்த்தலை

ஏனென்றால், மூன்றாம் ஜாமம் முடிந்து நாலாம் ஜாமம் ஆரம்பித்து விட்டால் சிவ பெருமான் ஆத்ம பூஜையில் ஈடுபட்டு விடுவார். திருக்கைலாய நியதிகளின்படி சிவபெருமான் ஆத்ம பூஜையில் ஈடுபட்டிருக்கும்போது தரிசனத்திற்காக யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, ஆத்ம பூஜை நேரம் வரும் வரை புதிது புதிதான தோத்திரங்களைக் கூறி அதிகார நந்தியானவர் ரிஷியை பூஜிக்கவே அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரமோ கடந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக அதிகார நந்தி ரிஷிக்கு பாத பூஜைகளை நிறைவேற்றி அர்க்ய பூஜையும் நிறைவேறியபோது சிவபெருமான் ஆத்ம பூஜையை ஆரம்பித்து விட்டார். அதிகார நந்தி நிம்மதியாக மூச்சு விட்டு, அந்த ரிஷியை சிவ தரிசனத்திற்காக ஒன்றும் அறியாதவர் போல் அனுப்பி வைத்தார். ஆனால், அந்த ரிஷி சிவ மூல மண்டபத்தை அடைந்தபோது அங்கு திரையிடப்பட்டு சூரிய உதயத்தில்தான் எம்பெருமானின் தரிசனம் கிட்டும் என்ற அதிர்ச்சியான செய்தி அவருக்குக் காத்திருந்தது.

செய்வதறியாது திகைத்தார் அந்த ரிஷி. ஈசனே கை விட்டு விட்டால் இனி யாரை அவர் சரணடைய முடியும்? எவ்வளவோ மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தாலும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீளும் வழி ஏதும் தெரியவில்லை. வேறு வழியின்றி பூலோகம் திரும்பினார், நளாயினி தேவியிடம் சரணடைவது ஒன்றுதான் இதற்கு வழி எனத் தெளிந்து அவள் இல்லம் நோக்கி சென்றார். அங்கே அவருக்கு ஓர் அதிசயக் காட்சி காத்திருந்தது. மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், இந்திரனும், யம மூர்த்தியும், இவ்வாறு அனைத்து தெய்வ தேவதா மூர்த்திகளும் அவர்கள் பத்தினிகளும் நளாயினியின் இல்லத்தில் குழுமி இருந்ததைக் கண்டு அந்த ரிஷிக்கு ஓரே ஆச்சரியம்.

நளாயினியின் சாபத்தால் சூரியன் எழாமல் ஈரேழு உலகங்களும் ஸ்தம்பித்து போனதால் சூரிய பகவானை மீட்பதற்காக அனைத்து தெய்வங்களும் அங்கே குழுமியுள்ளனர் என்பதை அறிந்து கொண்டார். தான் அலையாய் அலைந்து தேடிப் பார்க்க முடியாத மும்மூர்த்திகள் அந்த ஓலைக் குடிசையில் ஒன்றாய் எழுந்தருளியிருந்ததைக் கண்டு மகரிஷி பேருவகை எய்தினார். அதே சமயம் ஒரு பதிவிரதா தேவியின் சாபத்திற்கு மும்மூர்த்திகளாலும் பதில் சொல்ல முடியாது என்ற உண்மையையும் அவர் உணர்ந்து கொண்டார்.

மும்மூர்த்திகளின் வேண்டுதலுக்கு இணங்கி நளாயினி தேவி தன்னுடைய சாபத்தை திருப்பி வாங்கிக் கொண்டு சூரிய மூர்த்தியை மீண்டும் பூமியில் பவனி வரச் செய்தாள். அதனால் மகரிஷியின் தலையும் தப்பித்தது.

இவ்வாறு பதிவிரதா தேவி நளாயினியின் மகிமை அனைத்து லோகங்களுக்கும் பரவியது

அனுசூயை கதை


week12bமுன்னொரு காலத்தில் அத்திரி மகரிஷி என்ற மகா தபஸ்வி வாழ்ந்து வந்தார். அவரது மனைவி அநுசூயா. அவள் பதிவிரதா சிரோன்மணி. அவளுடைய பதிபக்தியை மூவுலகங்களும் புகழ்ந்தன. அவளது அடக்கமும் பொறுமையும் செயல்படும் திறனும், கணவனின் குறிப்பறிந்து சேவை செய்யும் பாங்கும் எங்கும் எல்லோராலும் பாராட்டிப் பேசப்பட்டன. தேவர்களும் அவளது பெருமையை மதித்துப் போற்றினர். அநுசூயாவைப் போல் ஒரு மாதர் குலத் திலகம் எங்கு தேடினாலும் பார்க்க முடியாது என்று நாரதர், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தேவியரிடம் புகழ்ந்து பேசினார்.

தம்மையும் விட மேலானவள் அநுசூயை என்ற புகழ்ச் சொற்கள் தேவியர் மூவரிடமும் பொறாமையை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் தம் கணவர்களிடம் தெய்வத்தன்மை வாய்ந்த எம்மிலும் பார்க்க ஒரு மனிதக் பெண் எவ்வாறு பண்பிலும் பணிவிடையிலும் சிறந்து புகழ் பெற முடியும்? என்று வாதம் செய்தனர்.
படைப்பு என்பது பிரம்ம விருப்பம். அது செலுத்தும் வழி தான் யார் என்றாலும் செயல்பட முடியும் என்ற உண்மையை உய்த்து உணர்ந்த பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தம் தேவியரிடம் அமைதியாக இருக்கும்படியும் தாங்கள் சென்று சோதிப்பதாகவும் கூறி, நாடகத்திற்கு தயாராகிப் பூலோகத்திற்கு வந்தார்கள்.
ஆசிரமத்தில் அநுசூயா மட்டும் இருந்தாள். அத்ரி முனிவர் வெளியில் சென்றிருந்தார். அந்த சமயத்தில் மூர்த்திகள் மூவரும் சந்நியாசிகளாக வேடம் தரித்து வீட்டிற்கு முன் வந்து உணவளிக்கும்படி குரல் கொடுத்தனர். அனுசூயை வந்த அதிதிகளை வரவேற்று உபசரித்து அமரச் செய்தாள்.
வந்தவர்கள், தாங்கள் மிகவும் பசியோடு இருப்பதாகவும், தாங்கள் விரும்பும் விதத்தில் உணவளிக்க வேண்டும் என்றும் கூறினர். வெளியில் சென்றிருக்கும் கணவர் வந்து விடட்டுமே என்று நினைத்திருந்த அநுசூயை அவர்கள் பசியுடன் இருப்பதாகக் கேட்டு உரிய ஏற்பாடுகளைச் செய்து உணவருந்த அழைத்தாள்;. அவர்கள் மீண்டும் தாங்கள் விரும்பும் வண்ணம் உணவளிக்க சித்தமா? என்று கேட்டனர்.
சித்தமாக இருக்கிறேன் என்று தெளிந்த உள்ளத்துடன் கூறினாள் அவள். சோதிக்க வந்த முனிவர்கள், ஆடைகளற்ற நிலையில் உணவளிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
அநுசூயா திடுக்கிடவில்லை. அமைதியாக, திடமாக, வந்திருப்பவர்களை உற்று நோக்கினாள். தவத்தாலும், பெண்மையின் சிறப்பினாலும் பதிவிரதா தன்மையினாலும் உயர் உணர்வு நிலையின் உச்சத்தில் இருந்த அந்த மாதரசி, ‘இவர்கள் சாதாரண முனிவர்கள் அல்ல. என்னைச் சோதிக்க வந்த மகா புருஷர்களாக இருக்க வேண்டும். அதிதிகளின் ஆசையை நிராகரிக்கக்கூடாது.
என்னுடைய சித்தம் சுத்தமாக இருந்தால், எனது கணவரின் தவம் வலிமையாய் இருந்தால் யாரால் என்ன செய்து விட முடியும்?” என்று சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவிற்கு வந்தாள். ‘தங்களின் விருப்பப்படியே நான் உணவிடுகிறேன்!” என்று கூறி, சமையல் அறைக்குள் சென்றாள். அடுத்த கணம் கண்களை மூடித் தன்னுள் மூழ்கி, ஆத்ம ஆற்றலைப் பணிந்து வேண்டினாள். அவளது அகமுகப் பிரார்த்தனையின் வலிமையால் ஆசனத்தில் அமர்ந்திருந்த முனிவர் மூவரும் குழந்தைகளாக மாறிவிட்டனர்.
அநுசூயா ஒவ்வொரு குழந்தையைத் தூக்கி எடுத்து அவர்கள் விரும்பிய வண்ணம் உணவை ஊட்டினாள். அவற்றின் வயிறு நிரம்பியதை அறிந்து, வாய் துடைத்து, மரத்திலே தூளி கட்டி அதிலே குழந்தைகளை விட்டு, சப்தஸ்வரங்களுடன், உபநிஷதப் பொருள் பொதிந்த இனிய பாடல்களைத் தாலாட்டாகப் பாடித் துhங்க வைத்தாள்.
அத்திரி முனிவர் தன் ஆசிரமத்தை அடைந்ததும், தனது பத்தினி பாடுவதையும், தூளியில் மூன்று குழந்தைகள் கிடப்பதையும் பார்த்துவிட்டு நடந்ததைப் பற்றி வினவினார். அவரும் வியந்தார். உடனே அவர் தம் திவ்விய பார்வையால் வந்தவர்கள் மூவரும் மும்மூர்த்திகளே என்பதைப் புரிந்து கொண்டார். தம் மனைவியுடன் சேர்ந்து அவர்களை வணங்கினார். உடனே மூவரும் தமது சுய வடிவத்தை எடுத்து எதிரில் தோன்றி இருவரையும் ஆசீர்வதித்தனர்.
அத்திரி முனிவரின் மனைவி அநுசூயாதேவியின் பெருமையை வெளிப்படுத்தவே இவ்வாறு நிகழ்ந்தது என்று கூறி, வேண்டும் வரத்தை அளிப்பதாகக் கூறினர். மும்மூர்த்திகளும் ஒரே வடிவமாக மூன்று குழந்தைகளும் என் புத்திரர்களாக இருக்க வேண்டும் என்ற வரத்தை அநுசூயா பிரார்த்தித்தாள். அவர்களும் அந்த வரத்தை அளித்து விட்டு மறைந்தனர். அந்த மும்மூர்த்திகளின் அம்சமாக ஸ்ரீ தத்தாத்ரேயர் அத்திரி முனிவருக்கும் அனசூயா தேவிக்கும் புத்திரனாக அவதரித்தார். அவதுhத குரு பரம்பரையின் மூல புருஷராக அவர் விளங்கினார். இந்த வரலாற்றை சித்தர் சொல்ல, நாமதாரகன் மிகுந்த சிரத்தையுடன் கேட்டான்.