Monday, January 22, 2018

நளாயினி கதை

சூரியனும் பணிந்த பதுமை
தொண்டை நாட்டில் நிடத நாடு என்ற நாடு உள்ளது. இதன் தலை நகரம் ஆதிந்தபுரம் ஆகும். அந்நாட்டை ஆண்ட ஸ்ரீநளச்சக்கரவர்த்திக்கும், சேது நாட்டு இளவரசி தமயந்திக்கும் பிறந்தவள் ஸ்ரீநளாயினி தேவி. நளாயினியின் பூர்வீக பெயர் இந்திர சேனை என்பதாகும்.

பதிவிரதையான நளாயினி ஒரு முறை தன்னுடைய கணவரான மௌத்கல்ய முனிவரை ஒரு கூடையில் வைத்து சுமந்து கொண்டு அடர்ந்த காட்டு வழியே சென்று கொண்டிருந்தாள். முனிவருடைய கால்கள் கூடைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. அப்போது காட்டில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த ஒரு ரிஷியின் தலைமேல் மௌத்கல்ய முனிவரின் கால்கள் இடித்து விட்டன. அதனால் கோபமடைந்த அந்த ரிஷி மறுநாள் சூரிய உதயமாகும்போது தன்ளை இடித்த மௌத்கல முனிவரின் தலை சுக்கு நூறாக சிதறி இறந்து விடட்டும் என்று சாபமிட்டார்.

ரிஷியின் சாபத்தைக் கேட்ட நளாயினி அம்முனிவரை வணங்கி தன்னுடைய அஜாக்கிரதையால்தான் இத்தகைய தவறு நேர்ந்து விட்டது என்றும் அதனால் தன்னுடைய கணவரை எக்காரணம் கொண்டும் சபித்து விட வேண்டாம் என்று மனறாடி கேட்டுக் கொண்டாள். நளாயினி எவ்வளவுதான் மன்றாடினாலும் அந்த முனிவர் அவள் வார்த்தைகளை சிறிதும் ஏற்கவில்லை. வேறு வழியில்லாத காரணத்தால் தன் கணவரைக் காப்பாற்றும் ஒரே வழி சூரியனை மறுநாள் காலையில் உதயம் ஆகாமல் நிறுத்தி விடுவதுதான் என்று முடிவுக்கு வந்து, கணவனைத் தவிர வேறு யாரையும் மனதினாலும் தீண்டாத பதிவிரதை நான் என்பது உண்மையானால் நாளை சூரியன் உதிக்காமல் போகட்டும், என்று வானத்தை நோக்கி முழங்கி விட்டு, தன் கணவனைச் சுமந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பி விட்டாள் நளாயினி. வீடு சென்றவுடன் தன் கணவனின் இடிபட்ட காலுக்கு மருந்து தடவி, உணவு கொடுத்து அனைத்து பணிவிடைகளையும் செவ்வனே முடித்து விட்டு உறங்கச் சென்று விட்டாள். 

ஆனால், நளாயினியின் எதிர் சாபத்தைக் கேட்ட முனிவர் திடுக்கிட்டார். தன்னையே எதிர்த்து சூரியனைச் சபிக்கும் இந்தப் பெண் யார் என்று தன்னுடைய ஞான திருஷ்டியில் பார்த்தார். அவள்தான் நளாயினி என்பதையும், அவள் ஒரு உத்தம பத்தினி என்பதையும் உணர்ந்து கொண்டார். என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போனார் மகரிஷி. பிரம்மாவை நிந்தனை செய்தால் பெருமாளிடம் விமோசனம் பெறலாம். பெருமாளை நிந்தித்தால் சிவனிடம் பிராய சித்தம் பெறலாம். சிவனையே நிந்தித்து விட்டால் கூட அதை கருணைக் கடலான சற்குரு அதை மன்னித்து விடுவார். ஆனால், உத்தம பதிவிரதா தேவியின் சாபத்திற்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. 

நிச்சயமாக தன்னுடைய சாபம் பலிக்காது என்பதை உணர்ந்த முனிவர் அதற்கு எப்படிப் பரிகாரம் பெறுவது என்று யோசிக்கத் தொடங்கினார். ஏனென்றால் ஒருவருடைய சாபம் பலிக்காத நிலை ஏற்படுமானால் அந்தச் சாபத்தைக் கொடுத்தவர்தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்பது இறை நியதி.

ராமரிடம் தன்னுடைய வில்லைக் கொடுத்த பரசுராமர் அதை நாணேற்ற முடியுமா என்று சவால் விடுத்தார் அல்லவா? அவருடைய சவாலை ஏற்று பரசுராமரின் தனுசில் நாணேற்றிய ராமர் அதற்கேற்ற இலக்கைக் கேட்டபோது பரசுராமர் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டு தன்னுடைய தபோ பலம் அனைத்தையும் ராமருடைய பாணத்திற்கு இலக்காக வைத்தார் அல்லவா? அதே விதத்தில் இப்போது முனிவரின் சாபம் பலனளிக்காத நிலை ஏற்பட்டபோது அது அந்த முனிவரைத்தான் தாக்கும். அவர் தலை வெடித்துச் சிதறும் சம்பவத்தை அவரே சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. இந்த இக்கட்டான ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பிரம்ம லோகம் விரைந்தார் ரிஷி.

பூமியில் நடந்த விஷயங்களை எல்லாம் இந்திரன் மூலம் அறிந்த பிரம்மா எப்படியாவது அந்த ரிஷியிடமிருந்து தப்பித்துக் கொண்டால் போதும் என்று எண்ணி சரஸ்வதியிடம், தாயே, ஒரு ரிஷி பத்தினி சாபத்திற்கு பிராய சித்தம் கேட்டு என்னிடம் வர நினைக்கிறான். பத்தினி சாபத்திற்கு மும்மூர்த்திகளாலும் பிராய சித்தம் தர இயலாதே. எனவே, ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அவனை அனுப்பி விடு, என்று சொல்லி விட்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார். சரஸ்வதி தேவியும் அவ்வாறே அந்த ரிஷி வந்தவுடன் அவருக்கு பாத பூஜைகள் செய்து கௌரவித்து, பிரம்ம மூர்த்தி ஒரு புதிய லோகத்தை சிருஷ்டி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தியானத்தில் இருப்பதால் மூன்று நாட்களுக்கு யாரையும் காண இயலாது என்று கூறி விட்டாள். இல்லாவிட்டால் பத்தினி சாபத்துடன் அம்முனிவரின் சாபத்திற்கும் ஆளாக வேண்டி வருமே.

ரிஷி வேறு வழியில்லாமல் விஷ்ணுவின் வைகுண்டம் சென்றார். இதற்குள் ஒரு ஜாமம் கழிந்து விட்டது. மகரிஷியின் வரவை அறிந்த பெருமாள் பத்தினி சாபத்திலிருந்து அந்த ரிஷியைக் காப்பாற்ற முடியாது என்பதால் நாம் இப்போதைக்கு இந்த ரிஷியின் சாபத்திலிருந்து மீள வேண்டுமானால் நீலகண்டனைச் சரணடைவோம் என்று முடிவு கட்டி கருட வாகனத்தில் ஏறி விரைந்து திருக்கயிலையில் சரண் புகுந்தார்.

விஷ்ணு பகவான் கைலாயம் சென்ற செய்தியை அறிந்த ரிஷி, சரி, இதுவும் நன்மைக்கே. நாமும் கைலாயம் சென்றால் சிவன், விஷ்ணு இருவரில் ஒருவரையாவது பார்த்து சாப விமோசனம் பெற்று விடலாம் என்று நம்பிக்கையை நெஞ்சில் வளர்த்துக் கொண்டு கைலாயம் சென்றார்.

கைலாயத்தில் அந்த ரிஷிக்கு அமோக வரவேற்பு. அதிகார நந்தி அந்த ரிஷியை எதிர் கொண்டழைத்து அவரை உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமர்த்தி அற்புதமாக பாத பூஜைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அதிதி பூஜை நியதியாக பூஜை நிறைவேறும் வரை அதிதியாக வந்தவர் எந்த வேண்டுகோளையும் முன் வைக்க முடியாது அல்லவா? எனவே, நந்தீஸ்வரரின் பூஜை நிறைவேறியவுடன்தான் தான் வந்த காரியத்தைக் கூறி தான் சிவபெருமானைத் தரிசனம் செய்யும் நோக்கத்தைக் கூற முடியும்.

ஆனால், ரிஷியின் வரவை முன்னரே அறிந்த சிவபெருமான் எப்படியாவது அவரை மூன்றாம் ஜாமம் வரை கைலாய வாசலிலேயே நிறுத்தி வைக்கும்படிக் கட்டளை இட்டிருந்தார்.

ஸ்ரீ மத்யார்ஜுனேஸ்வரர் சிவாலயம்
பெட்டவாய்த்தலை

ஏனென்றால், மூன்றாம் ஜாமம் முடிந்து நாலாம் ஜாமம் ஆரம்பித்து விட்டால் சிவ பெருமான் ஆத்ம பூஜையில் ஈடுபட்டு விடுவார். திருக்கைலாய நியதிகளின்படி சிவபெருமான் ஆத்ம பூஜையில் ஈடுபட்டிருக்கும்போது தரிசனத்திற்காக யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, ஆத்ம பூஜை நேரம் வரும் வரை புதிது புதிதான தோத்திரங்களைக் கூறி அதிகார நந்தியானவர் ரிஷியை பூஜிக்கவே அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரமோ கடந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக அதிகார நந்தி ரிஷிக்கு பாத பூஜைகளை நிறைவேற்றி அர்க்ய பூஜையும் நிறைவேறியபோது சிவபெருமான் ஆத்ம பூஜையை ஆரம்பித்து விட்டார். அதிகார நந்தி நிம்மதியாக மூச்சு விட்டு, அந்த ரிஷியை சிவ தரிசனத்திற்காக ஒன்றும் அறியாதவர் போல் அனுப்பி வைத்தார். ஆனால், அந்த ரிஷி சிவ மூல மண்டபத்தை அடைந்தபோது அங்கு திரையிடப்பட்டு சூரிய உதயத்தில்தான் எம்பெருமானின் தரிசனம் கிட்டும் என்ற அதிர்ச்சியான செய்தி அவருக்குக் காத்திருந்தது.

செய்வதறியாது திகைத்தார் அந்த ரிஷி. ஈசனே கை விட்டு விட்டால் இனி யாரை அவர் சரணடைய முடியும்? எவ்வளவோ மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தாலும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீளும் வழி ஏதும் தெரியவில்லை. வேறு வழியின்றி பூலோகம் திரும்பினார், நளாயினி தேவியிடம் சரணடைவது ஒன்றுதான் இதற்கு வழி எனத் தெளிந்து அவள் இல்லம் நோக்கி சென்றார். அங்கே அவருக்கு ஓர் அதிசயக் காட்சி காத்திருந்தது. மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், இந்திரனும், யம மூர்த்தியும், இவ்வாறு அனைத்து தெய்வ தேவதா மூர்த்திகளும் அவர்கள் பத்தினிகளும் நளாயினியின் இல்லத்தில் குழுமி இருந்ததைக் கண்டு அந்த ரிஷிக்கு ஓரே ஆச்சரியம்.

நளாயினியின் சாபத்தால் சூரியன் எழாமல் ஈரேழு உலகங்களும் ஸ்தம்பித்து போனதால் சூரிய பகவானை மீட்பதற்காக அனைத்து தெய்வங்களும் அங்கே குழுமியுள்ளனர் என்பதை அறிந்து கொண்டார். தான் அலையாய் அலைந்து தேடிப் பார்க்க முடியாத மும்மூர்த்திகள் அந்த ஓலைக் குடிசையில் ஒன்றாய் எழுந்தருளியிருந்ததைக் கண்டு மகரிஷி பேருவகை எய்தினார். அதே சமயம் ஒரு பதிவிரதா தேவியின் சாபத்திற்கு மும்மூர்த்திகளாலும் பதில் சொல்ல முடியாது என்ற உண்மையையும் அவர் உணர்ந்து கொண்டார்.

மும்மூர்த்திகளின் வேண்டுதலுக்கு இணங்கி நளாயினி தேவி தன்னுடைய சாபத்தை திருப்பி வாங்கிக் கொண்டு சூரிய மூர்த்தியை மீண்டும் பூமியில் பவனி வரச் செய்தாள். அதனால் மகரிஷியின் தலையும் தப்பித்தது.

இவ்வாறு பதிவிரதா தேவி நளாயினியின் மகிமை அனைத்து லோகங்களுக்கும் பரவியது

15 comments:

  1. மிகவும் தெளிவான எழுத்துப்பிழை இல்லாத பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  2. நன்று. இதில் விடுபட்ட பகுதிகளும் சுவாரஸ்யம் மிகுந்தவையே. வாசகர்களுக்காக இதோ:
    இந்திர சேனையின் புகழ் எல்லா உலகங்களிலும் பரவி வந்த நேரம். அந்த சிறுமி பற்றி கேள்வி பட்டவர்கள், "ஸௌபாக்யவதியாக இருக்கட்டும், ஆரோக்யவதியாக இருக்கட்டும், ஆயுஷ்வதியாக இருக்கட்டும், யசஸ்வினியாக (புகழ் பெற்றவளாக) இருக்கட்டும்" என்று பலவாறு வாழ்த்தினர். ரிஷிகள் கூடியிருந்த ஒரு சபையில் இந்திர சேனை பற்றி பேச்சு வந்த போது, எல்லோரும் வாழ்த்த மௌத்கல்யர் என்ற ஒரு ரிஷி மட்டும் அவளை சோதிக்க முடிவு கொண்டார். அவர் குணம் அதுவல்ல; இறைவனின் திருவுள்ளம் அப்படி இருந்தது போலும்.
    நளனிடம் வந்து பெண் கேட்டு திருமணம் செய்து கொண்டார். "அரண்மனை வாழ்வு துறந்து என்னுடன் காட்டிற்கு வா" என்றார். பின் தொடர்ந்து போனாள் அந்த சிறுமி. பல கொடுமைகளை நிறைவேற்றினார் ரிஷி. (இன்றைய சீரியல் டைரக்டர்களுக்கு முன்னுதாரணம்). அசர வில்லை நம் கதாநாயகி. பக்தியுடனும் பணிவுடனும் தான் செய்யும் தொண்டு சிறிதும் குறைவு படாமல் நிறைவேற்றினாள். தன் தவ வலிமையால் தன் உடல் முழுவதும் குஷ்ட ரோகம் வந்த தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு நடக்க முடியவில்லை என்றார். எங்கு சென்றாலும் கூடையில் சுமந்து செல்ல வேண்டும். தலையில் ஏற்றி சிறிது நேரத்தில் தாகமாக உள்ளது இறக்கு என்பார். தண்ணீர் கொடுத்து தலையில் ஏற்றியவுடன் சிறிது நேரத்தில் குளிராக இருக்கிறது இறக்கி போர்த்தி விடு என்பார். பல துன்பங்களை அனுபவித்தாலும் பதிசிஸ்ருஷையிலிருந்து தவறவில்லை நளாயினி.
    ஒருமுறை ஒரு அழகான தாசி கண்ணில் பட அவளுடன் நான் சுகம் அனுபவிக்க வேண்டும் என்றார் மௌத்கல்யர். நினைத்துப் பாருங்கள், ஒரு மனைவியிடம் அவள் கணவன் "வேறு பெண்ணுடன் அனுபவிக்க வேண்டும், ஏற்பாடு செய்" என்று சொன்னால் அவள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று. சரி ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அந்த அரசகுமாரி, ஒரு விலைமகளின் வீட்டு வாசலை அதிகாலை யாரும் பார்க்கும் முன்பே நீர் தெளித்து கோலம் போட்டு வரலானாள்.3 நாட்களுக்குப் பின் அந்த தாசி மறைந்திருந்து நளாயினியை கண்டுபிடித்து அழைத்து விசாரித்தால், தன்னுடைய கோரிக்கையை சொன்னாள் நளாயினி. மௌத்கல்யருக்கு சீழும் ரத்தமும் வடியும் தேகம், சில நேரங்களில் புழுவும் உள்ளிருந்து வரும். அவரை புணர சம்மதித்தாள் தாசி. கணவனை கொண்டு வந்து தாசி வீட்டில் இறக்கி விட்டு வெளியில் காத்திருந்தாள் நளாயினி. உள்ளே போனதும் மௌத்கல்யர் தான் ஒரு ரிஷி என்றும், அந்த தாசியை ஸஹோதரியாக பாவிப்பதாகவும், அவளுக்கு வேண்டிய வரம் அளிப்பதாகவும் கூறி (ஸம்போகம் நிகழாமலே) வெளியே வந்தார்.
    அவ்வாறு கூடையில் தூக்கி செல்லும் போதுதான், அரசனால் தவறாக தண்டனை விதிக்கபட்டு கழுவில் தொங்கி கொண்டிருந்த மாண்டவ்யர் என்ற ரிஷியின் மீது மௌத்கல்யரின் கால் பட வலியால் துடித்து போனார், மாண்டவ்யர். சூரியன் உதிக்கும் போது உன் கணவனின் மரணம் சம்பவிக்கும் என்று சாபமிட்டார். மற்றவை நீங்கள் எழுதியவையே.

    ReplyDelete
    Replies
    1. பின்னர் சுய உருவத்துடன் நீண்ட நாட்கள் மௌத்கல்யரும் நளாயினியும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் என்று புராணம் முடிகிறது.

      Delete
  3. அந்த தாசியின் பெயர் என்ன

    ReplyDelete
  4. எதற்கு நளாயினி சிவனிடம் ஐந்து கணவர் களை வேண்டினாள்

    ReplyDelete
  5. ஐந்து கணவனை வேண்டவில்லை. ஐந்து குணங்கள் உள்ள கணவனை வேண்டினாள்.

    ReplyDelete
  6. நளபாகம் பற்றி ஏதேனும் தெரிந்தால் உதவியாக இருக்கும்

    ReplyDelete
  7. அருமை. விடுபட்டதை எழுதியவர்களுக்கும் வாழ்த்துக்கள். கதைபுரியும்படியாக நன்றாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானும், முனிவர்களும், சித்தர்களும் நளாயினியும் அருள்புரியட்டும்

    ReplyDelete
  8. சிறந்த பதிவு

    ReplyDelete
  9. அருமை ஐயா! எவ்வளவு அற்புதமாக இருக்கிறது நமது இதிகாச புராணங்கள்! இறையருள் நிறைய வேண்டுகிறேன்!

    ReplyDelete
  10. மீச்சிறப்பு! இறையருள் பெற்று அனைவரும் இன்புற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்!

    ReplyDelete